IPL TAMILNEWSTAMIL

4-வது வரிசைக்கு மேக்ஸ்வெல் பொறுத்தமானவர் – விராட் கோலி சொல்கிறார்

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. மே மாதம் 30-ந் தேதி வரை இந்த போட்டி 6 நகரங்களில் நடத்தப்படுகிறது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது.

இதில் பெங்களூர் அணி வெற்றிபெற்றது. ஆட்டத்தின் கடைசி பந்தில் அந்த அணிக்கு வெற்றி கிடைத்தது.

பெங்களூர் அணியின் வெற்றிக்கு வேகப்பந்து வீரர் ஹர்‌ஷல் படேல், பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் காரணமாக இருந்தனர்.

முதலில் விளையாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. கிறிஸ்லின் அதிகபட்சமாக 35 பந்தில் 49 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) சூர்யகுமார் யாதவ் 23 பந்தில் 31 ரன்னும் (4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர். ஹர்‌ஷல் படேல் 27 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டிவில்லியர்ஸ் 27 பந்தில் 48 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), மேக்ஸ்வெல் 28 பந்தில் 39 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் விராட் கோலி 29 பந்தில் 33 ரன்னும் எடுத்தனர். பும்ரா, ஜேன்சன் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

இந்த வெற்றி குறித்து பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றி கிடைத்தது. 4-வது வீரர் வரிசைக்கு மேக்ஸ்வெல் பொறுத்தமானவர். அவர் ஆட்டத்தின் வேகத்தையும், தன்மையையும் மாற்றக் கூடியவர். அவர் உத்வேகம் அளிக்கக்கூடிய பேட்ஸ்மேன் ஆவார்.

முதல் போட்டியிலேயே வெற்றிபெற்றது முக்கியமானது. ஏனென்றால் மும்பை அணி மிகவும் வலுவான அணியாகும். டிவில்லியர்ஸ் எப்போதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

முதல் ஆட்டத்தில் வெற்றி பெறுவதைவிட கோப்பையை வெல்வதுதான் முக்கியமானது. நாங்கள் கடுமையாக போராடிதான் தோற்றோம். 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம்.

நாங்கள் சில தவறுகளை செய்தோம். டிவில்லியர்ஸ் சிறப்பாக விளையாடி ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெங்களூர் அணி 2-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 14-ந் தேதி எதிர்கொள்கிறது. மும்பை அணி அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை 13-ந் தேதி சந்திக்கிறது. இந்த 2 ஆட்டங்களும் சென்னையில் நடக்கிறது. 

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker