CRICKETLATEST UPDATESNEWSTAMIL

4வது டி20 கிரிக்கெட்- இங்கிலாந்துக்கு 186 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

4வது டி20 கிரிக்கெட்- இங்கிலாந்துக்கு 186 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அணி, தற்போது 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
 
இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து மோதும் 4-வது 20 ஓவர் போட்டி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 
இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. காயமடைந்த இஷான் கிஷனுக்கு பதில் சுர்யகுமார் யாதவ் அறிமுகம் செய்யப்பட்டார். இதேபோல் யுஸ்வேந்திர சாகலுக்கு பதில் ராகுல் சாகருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
 
துவக்க வீரர் ரோகித் சர்மா 12 ரன்களிலும், கேஎல் ராகுல் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 
 
ஆனால், அறிமுக போட்டியிலேயே அசத்திய சூர்யகுமார் யாதவ், பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்சர்களாக பறக்கவிட்டார். 28 பந்துகளில் அரை சதம் கடந்தார். இதன்மூலம் அறிமுக டி20 போட்டியில் அரை சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை யாதவ் பெற்றார். அரை சதம் அடித்தபின்னர் சற்று நிதானமாக ஆடிய யாதவ், 57 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். 
 
அதன்பின்னர் ரிஷப் பண்ட் 30 ரன்களும், ஹர்திக் பாண்டியா 11 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 37 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 4 ரன்களும் அடிக்க, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker