TAMIL

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட தயார் – ஹர்பஜன்சிங் விருப்பம்

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன்சிங் 2016-ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு பிறகு இந்திய அணியில் இடம் பெறவில்லை.

ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வரும் 39 வயதான ஹர்பஜன்சிங் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘இந்திய அணிக்காக மீண்டும் விளையாட நான் தயாராக இருக்கிறேன்.

ஐ.பி.எல். போட்டி பவுலர்களுக்கு மிகவும் கடினமானதாகும்.

ஏனெனில் இந்த போட்டிக்கான மைதானம் சிறியதாகும். உலகின் முன்னணி வீரர்கள் அனைவரும் இந்த போட்டியில் விளையாடுகிறார்கள்.

அவர்களுக்கு எதிராக பந்து வீசுவது என்பது மிகவும் சவாலானதாகும். ஐ.பி.எல். போட்டியில் அவர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டால், சர்வதேச போட்டியிலும் என்னால் சிறப்பாக செயல்பட முடியும் தானே?.

ஐ.பி.எல். போட்டியில் பவர்பிளே மற்றும் மிடில் ஓவர்களில் நான் நன்றாக பந்து வீசுவதுடன் விக்கெட்டும் வீழ்த்துகிறேன்.

எனக்கு வயதாகி விட்டது என்பதால் தேர்வாளர்கள் என்னை அணித்தேர்வில் கருத்தில் கொள்வதில்லை.

நான் உள்ளூர் போட்டிகள் எதிலும் விளையாடவில்லை. கடந்த 4-5 ஆண்டுகளாக ஐ.பி.எல். போட்டியில் நான் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்து வருகிறேன்.

இருப்பினும் அவர்கள் என்னை கண்டு கொள்வதில்லை. சர்வதேச போட்டியில் எல்லா அணிகளிலும், ஐ.பி.எல், அணிகளை போல் தரமான வீரர்கள் கிடையாது.

அனைத்து ஐ.பி.எல். அணிகளிலும் ‘டாப்-6’ வீரர்கள் சிறப்பானவர்களாக இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா அணிகளின் பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. ஐ.பி.எல். போட்டியில் பேர்ஸ்டோ, வார்னர் விக்கெட்டை என்னால் வீழ்த்த முடிகிறது என்றால் சர்வதேச போட்டியிலும் அவர்களது விக்கெட்டை கைப்பற்ற முடியுமல்லவா?. இந்திய அணியில் விளையாடுவது என் கையில் இல்லை.

தற்போதைய இந்திய கிரிக்கெட் அமைப்பில் ஒருவரும் உங்களிடம் இது பற்றி பேசமாட்டார்கள்’ என்று தெரிவித்தார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker