TAMIL

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 4-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி வெற்றி

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் பெண்கள் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கயானாவில் நேற்று முன்தினம் நடந்தது.

போட்டி தொடங்குவதற்கு முன்பு மழை பெய்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. இதனால் போட்டி 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட்இண்டீஸ் அணியின் பொறுப்பு கேப்டன் அனிசா முகமது பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, வெஸ்ட்இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியதுடன், வேகமாகவும் விக்கெட்டுகளை இழந்தது.



9 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பூஜா வஸ்த்ராகர் 10 ரன்கள் சேர்த்தார். மற்ற வீராங்கனைகள் யாரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. தானியா பாட்டியா 8 ரன்னுடனும், அனுஜா பட்டீல் 2 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஹெய்லி மேத்யூஸ் 3 விக்கெட்டும், அபி பிளட்செர், ஷினிதா கிரிமான்ட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 9 ஓவர்களில் 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி, இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினார்கள். 9 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 45 ரன்களே எடுத்தது. இதனால் இந்திய அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஹெய்லி மேத்யூஸ் 11 ரன்னும், சினெலி ஹென்றி 11 ரன்னும், நாதஷா மெக்லின் 10 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் அனுஜா பட்டீல் 2 விக்கெட்டும், தீப்தி ஷர்மா, ராதா யாதவ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். வெஸ்ட்இண்டீஸ் வீராங்கனை ஹெய்லி மேத்யூஸ் ஆட்டநாயகி விருது பெற்றார்.

ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்ட இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker