TAMIL

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: கர்நாடகா, குஜராத் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேற்றம்

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டத்தில் புதுச்சேரி- கர்நாடக அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த புதுச்சேரி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 207 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. மாரிமுத்து (58 ரன்), திரிவேதி (54 ரன்) அரைசதம் அடித்தனர். அடுத்து களம் இறங்கிய கர்நாடகா 41 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 213 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. அதிகபட்சமாக லோகேஷ் ராகுல் 90 ரன்கள் (112 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்து கேட்ச் ஆனார்.



தனது சொந்த மாநில அணியை எதிர்த்து பவுலிங் செய்த புதுச்சேரி வேகப்பந்து வீச்சாளர் வினய்குமார் 7 ஓவர்களில் 45 ரன்கள் விட்டுக்கொடுத்தாரே தவிர ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை.

மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் டெல்லி- குஜராத் அணிகள் சந்தித்தன. முதலில் பேட் செய்த டெல்லி அணி 49 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கேப்டன் துருவ் ஷோரே 91 ரன்கள் சேர்த்தார். ஷிகர் தவான் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

தொடர்ந்து விளையாடிய குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் பார்த்தீவ் பட்டேல் (76 ரன்), பிரியங் பன்சால் (80 ரன்) ஆகியோரின் வலுவான அஸ்திவாரம் வெற்றி வாய்ப்பை எளிதாக்கியது. குஜராத் அணி 37.5 ஓவர்களில் இலக்கை அடைந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டு அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.

கர்நாடக மாநிலம் ஆலூரில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் 3-வது கால்இறுதி ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி, மன்தீப்சிங் தலைமையிலான பஞ்சாப்பை (காலை 9 மணி) சந்திக்கிறது.

லீக் சுற்றில் தோல்வி பக்கமே செல்லாமல் 9 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று வீறுநடை போட்ட தமிழக அணியின் ஆதிக்கம் நாக்-அவுட் சுற்றிலும் நீடிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 4-வது கால்இறுதியில் நடப்பு சாம்பியன் மும்பை அணி, சத்தீஷ்காருடன் மோதுகிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker