TAMIL

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி ஒரு ரன்னில் தோல்வி

இங்கிலாந்து – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஈஸ்ட் லண்டனில் நடந்தது.

இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக பவுமா 43 ரன்களும், கேப்டன் குயின்டான் டி காக், வான்டர் துஸ்சென் தலா 31 ரன்களும் எடுத்தனர்.



அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் ஜாசன் ராய் (70 ரன், 7 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் இயான் மோர்கன் (52 ரன், 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அரைசதம் விளாசியதால் வெற்றியை நெருங்கியது.

கடைசி ஓவரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. கைவசம் 4 விக்கெட் இருந்தது.

பரபரப்பான இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் நிகிடி வீசினார்.

முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த டாம் கர்ரன் அடுத்த பந்தில் கேட்ச் ஆனார்.

3-வது பந்தில் ரன் இல்லை. 4-வது பந்தில் 2 ரன் எடுத்த மொயீன் அலி அடுத்த பந்தில் சிக்கினார்.

இதையடுத்து கடைசி பந்தில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2-வது ரன்னுக்காக ஓடுகையில் அடில் ரஷித் ‘ரன்-அவுட்’ செய்யப்பட்டார்.

இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களே எடுத்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது.



தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் நிகிடி 3 விக்கெட்டும், பெலக்வாயோ, பீரன் ஹென்ரிக்ஸ் தலா 2 விக்கெட்டும், ஸ்டெயின் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட இந்த தொடரில் தென்ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

2-வது 20 ஓவர் போட்டி டர்பனில் இன்று நடக்கிறது.

இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker