TAMIL

கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் வீரர்களுக்கு ஊதியம் வழங்கிய இந்திய கிரிக்கெட் வாரியம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகமே ஸ்தம்பித்து போய் இருக்கிறது.

சர்வதேச விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும், தள்ளிவைக்கப்பட்டும் இருக்கின்றன.



இதனால் விளையாட்டு வீரர்கள் வீட்டிலேயே முடங்கி போய் கிடக்கிறார்கள்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட கிரிக்கெட் வாரியங்கள் பெருத்த வருவாய் இழப்பை சந்தித்துள்ளன.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் தங்கள் நாட்டு வீரர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை பிடித்தம் செய்து கொண்டு வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறது.

அந்த நாட்டு வீரர்களும் தங்களது சம்பளத்தை குறைத்து கொள்ள முன்வந்து இருக்கிறார்கள்.

இந்த பாதிப்பில் இருந்து உலகின் பணக்கார விளையாட்டு அமைப்புகளில் ஒன்றான இந்திய கிரிக்கெட் வாரியமும் தப்பவில்லை.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மாதம் (மார்ச்) 29-ந் தேதி தொடங்க இருந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 15-ந் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.



கொரோனா வைரசின் கோரதாண்டவம் இன்னும் தனியாத நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி அரங்கேறுவது கேள்விக்குறி தான்.

ஐ.பி.எல். போட்டி நடைபெறாமல் போனால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருவாயில் பேரடி விழும் எனலாம்.

இத்தகைய எதிர்பாராத இடர்பாடுகளுக்கு மத்தியிலும் இந்திய கிரிக்கெட் வாரியம் தனது ஒப்பந்த வீரர்களுக்கு வழங்க வேண்டிய காலாண்டு சம்பள தொகையை எந்தவித பாக்கியும் வைக்காமல் வழங்கி இருக்கிறது.

நிலையற்ற தன்மை நிலவும் இந்த தருணத்தில் எந்தவொரு கிரிக்கெட் வீரரும் பாதிப்புக்கு ஆளாகக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த நடவடிக்கையை சத்தமின்றி செய்து காட்டி இருக்கிறது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘மார்ச் 24-ந் தேதியில் இருந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும், எத்தகைய எதிர்பாராத சூழ்நிலையையும் எதிர்கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் தயாராகவே இருந்தது.

தனது ஒப்பந்த வீரர்களுக்கு வழங்க வேண்டிய காலாண்டு சம்பள நிலுவை தொகையை இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்கி இருக்கிறது.



அத்துடன் இந்த காலகட்டத்தில் இந்தியா மற்றும் இந்தியா ‘ஏ‘ அணிக்காக விளையாடிய வீரர்களுக்கான போட்டி கட்டணமும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி ஆண்டின் கடைசி வரையில் வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து நிலுவை தொகைகளும் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.

மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களை போல் இல்லாமல் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிதி நிலைமை நிலையானதாக இருப்பதால் நம்மால் சோதனை காலத்தையும் சமாளிக்க முடியும்.

முன்பு போல் எப்பொழுதும் நமது வீரர்களின் நலனை இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நன்றாக கவனித்து கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்.

இந்த பிரச்சினையால் நமது சர்வதேச வீரர்களோ, உள்ளூர் வீரர்களோ பாதிக்கப்பட மாட்டார்கள்.

தற்போதைய சூழ்நிலையை பார்க்கையில் ஐ.பி.எல். போட்டி விஷயத்தில் நிலையான முடிவு எதுவும் எடுக்க முடியாது.



கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்து சகஜ நிலை திரும்புவது எப்போது? என்பதே தெரியவில்லை.

அப்படி இருக்கையில் ஐ.பி.எல். போட்டி எப்பொழுது நடைபெறும் என்று எப்படி சொல்ல முடியும்?‘ என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker