TAMIL

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது. இதில் ஆசிய கண்டத்திற்கான தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இடம் பெற்றுள்ள 40 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா ஒரு முறை மோத வேண்டும்.



லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகளும், 2-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகளும் என்று மொத்தம் 12 அணிகள் 3-வது சுற்றுக்கு முன்னேறும். இதில் இந்திய அணி ‘இ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஓமன், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், கத்தார் ஆகிய அணிகள் அந்த பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளாகும்.

இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் ஓமனிடம் தோல்வி கண்டது. 2-வது ஆட்டத்தில் கோல் எதுவுமின்றி ஆசிய சாம்பியனான கத்தாருடன் டிரா கண்டது. 3-வது ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் வங்காளதேச அணியுடன் டிரா செய்தது.

இந்த நிலையில் இந்திய அணி தனது 4-வது லீக் ஆட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. இந்த ஆட்டம் தஜிகிஸ்தான் நாட்டில் துஷான்பே நகரில் உள்ள செயற்கை இழை மைதானத்தில் நடக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் ஓமனிடமும், 0-6 என்ற கோல் கணக்கில் கத்தாரிடமும் தோல்வியை சந்தித்தது. முந்தைய லீக் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை தோற்கடித்தது.

உலக தரவரிசையில் 106-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 149-வது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்யும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். அதேநேரத்தில் முந்தைய ஆட்டத்தில் வெற்றி பெற்ற நம்பிக்கையுடன் ஆப்கானிஸ்தான் அணி களம் காணும். செயற்கை இழை மைதானம் மற்றும் தஜிகிஸ்தானில் நிலவும் கடும் குளிர் ஆகியவை இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்தியா 6 முறையும், ஆப்கானிஸ்தான் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

போட்டி குறித்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி கருத்து தெரிவிக்கையில், ‘நாங்கள் கோல் அடிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறோம். அதனை மட்டும் செய்தால் போதாது. உருவாக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டு கோலாக மாற்ற வேண்டியது முக்கியமானதாகும். அத்துடன் தடுப்பு ஆட்டத்திலும் கடினமாக இருக்க முயற்சிக்க வேண்டும்’ என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker