TAMIL

இந்தியா-இலங்கை இரண்டாவது 20 ஓவர் போட்டி – இந்தியாவுக்கு 143 ரன்கள் இலக்கு

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மலிங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி, 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற இருந்த முதல் ஆட்டம், மழையினால் ஆடுகளம் பாதிக்கப்பட்டதால் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த தொடரின் இரண்டாவது ஆட்டம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடைபெற்று வருகிறது.



டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இலங்கை அணியில் இருந்து குணதிலகா மற்றும் அவிஷ்கா பெர்னாண்டோ தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.

வாஷிங்டன் சுந்தர் வீசிய 5 வது ஓவரில் அவிஷ்கா பெர்னாண்டோ (22 ரன்கள்), நவ்தீப் சயினியிடம் கேட்ச் ஆனார்.

அடுத்ததாக குசல் பெரேரா களம் இறங்கினார்.

அதனை தொடர்ந்து நவ்தீப் சயினி வீசிய 8 வது ஓவரில் குணதிலகா (20 ரன்கள்) போல்ட் ஆனார்.

இதன் பின்னர் களம் இறங்கிய ஒஷாடா பெர்னாண்டோ, குசல் பெரேராவுடன் ஜோடி சேர்ந்தார்.



இந்த ஜோடியும் அதிக நேரம் நிலைத்து நிற்கவில்லை. 10 ரன்கள் எடுத்த நிலையில் ஒஷாடா பெர்னாண்டோ தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்த ஓவரில் குசல் பெரேரா(34 ரன்கள்) கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் இலங்கை அணியின் ரன் வேகம் வெகுவாக குறைந்தது.

இதன் பின்னர் வந்த பானுகா ராஜபக்சே (9 ரன்கள்) நவ்தீப் சயினியின் பந்துவீச்சில் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார்.

அதன்பிறகு வந்த தசுன் ஷனகா 7 ரன்னிலும், தனஞ்ஜெயா டி சில்வா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மலிங்கா முதல் பந்திலேயே கேட்ச் ஆகி வெளியேறினார்.



இறுதி ஓவரில் வானிந்து ஹசரங்கா மூன்று பவுண்டரிகளை பறக்கவிட்டு இலங்கை ரசிகர்களை சற்று ஆறுதல்படுத்தினார்.

இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து இந்திய அணி 143 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker