TAMIL
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி வரலாறு படைத்தது.
இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 347 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 103 ரன்களும், லோகேஷ் ராகுல் 88 ரன்களும் (64 பந்துகள், 3 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) அடித்தனர்.
கேப்டன் விராட் கோலி 51 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு நியூசிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான குப்தில் (32) மற்றும் நிக்கோல்ஸ் (78) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதேபோன்று லாத்தம் (69) ரன்கள் எடுத்து வெளியேறினார். மற்றவர்கள் குறைந்த ரன்களே எடுத்திருந்தனர்.
இதனிடையே, 43 ஓவர்கள் முடிவில் 99 ரன்கள் எடுத்திருந்த ராஸ் டெய்லர், அடுத்து குல்தீப் யாதவ் வீசிய முதல் பந்தில் ஒரு ரன் எடுத்து சதம் கடந்துள்ளார்.
இவற்றில் 4 சிக்சர்கள், 10 பவுண்டரிகளும் அடங்கும். தொடர்ந்து விளையாடிய அந்த அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது.
எனினும், அடுத்து வந்த சான்ட்னெர் 1 பவுண்டரி, ஒரு சிக்சர் என அடித்து 12 ரன்கள் எடுத்தும், டெய்லர் 109 (84 பந்துகள்) ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதனால் 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 348 ரன்கள் எடுத்து நியூசிலாந்து வெற்றி பெற்றது.