TAMIL
வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: 493 ரன்கள் குவித்த நிலையில் இந்திய அணி டிக்ளேர்

இந்தியா – வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த வங்காளதேச அணி இந்திய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 150 ரன்னில் சுருண்டது
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. 2 ஆம் நாளான நேற்று, மயங்க் அகர்வாலின் (243 ரன்கள்) சிறப்பான ஆட்டத்தால் , நேற்றைய ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன்கள் குவித்து இருந்தது. ஜடேஜா 60 ரன்களுடனும் உமேஷ் யாதவ் 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், 3-வது நாள் ஆட்டம் இன்று துவங்கும் முன்பாகவே, முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்து கொள்வதாக இந்திய அணி அறிவித்தது. இதையடுத்து, 343 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை துவங்கிய வங்காளதேச அணி பேட் செய்து வருகிறது.