
மூன்று முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் ஏனோ தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
6 ஆட்டங்களில் 2-ல் வெற்றியும் (மும்பை, பஞ்சாப்புக்கு எதிராக) 4-ல் தோல்வியும் சந்தித்துள்ள சென்னை அணி எஞ்சிய 8 ஆட்டங்களில் 6-ல் வெற்றி பெற்றால் தான் ‘பிளே-ஆப்’ சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும்.
168 ரன்கள் இலக்கைநோக்கி ஆடிய முந்தைய கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டுக்கு 99 ரன்களுடன் எளிதில் வெற்றி பெறும் நிலையில் இருந்தது.
ஆனால் கடைசி கட்டத்தில் கேதர் ஜாதவின் (12 பந்தில் 7 ரன்) சொதப்பலால் 10 ரன் வித்தியாசத்தில் வெற்றியை தாரைவார்க்க வேண்டியதாகிவிட்டது. பிராவோ, ஜடேஜாவுக்கு முன்பாகவே ஜாதவை களம் இறக்கியது கடும் விமர்சனத்திற்குள்ளானது.
சொல்லப்போனால் வாட்சன், பிளிஸ்சிஸ், அம்பத்தி ராயுடு தவிர மற்றவர்களின் பேட்டிங் சென்னை அணியில் எடுபடவில்லை. கேப்டன் டோனியும் தடுமாறிக்கொண்டிருக்கிறார்.
ஜாதவ் கழற்றி விடப்பட்டால் ருதுராஜ் கெய்க்வாட் அல்லது ஜெகதீசன் ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிட்டும்.
கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 5 ஆட்டங்களில் 3-ல் வெற்றி கண்டு ஓரளவு நல்ல நிலையில் உள்ளது.
அந்த அணியில் அரைசதங்கள் அடித்துள்ள டிவில்லியர்ஸ், கோலி, பிஞ்ச், தேவ்தத் படிக்கல் பேட்டிங் தூண்களாக உள்ளனர்.
யுஸ்வேந்திர சாஹலும், வாஷிங்டன் சுந்தரும் சுழலில் சிக்கனத்தை காட்டி மிரட்டுகிறார்கள். இதனால் சென்னை அணிக்கு கடும் சோதனை காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
இந்த சீசனில் கடைசியாக நடந்த 7 ஆட்டங்களில் 6-ல் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. அதனால் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.