TAMIL
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நியூசிலாந்தில் நடத்தலாம்: டீன் ஜோன்ஸ் யோசனை

7-வது 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
கொரோனா பீதி மற்றும் ஆஸ்திரேலியாவில் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு காரணமாக இந்த போட்டி தள்ளிவைக்கப்படலாம் என்று தெரிகிறது.
அது குறித்து வருகிற 10-ந்தேதி ஐ.சி.சி. முடிவு செய்கிறது. இதற்கிடையே, ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் இந்த உலக கோப்பை போட்டியை நியூசிலாந்தில் நடத்தலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார்.
‘நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது. கடந்த 12 நாட்களில் புதிய தொற்று எதுவும் இல்லை.
இதே நிலை அங்கு நீடிக்கும் பட்சத்தில் சமூக விலகல் நடவடிக்கை மற்றும் மக்கள் கூட்டம் சேர்வதற்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவை
அடுத்த வாரத்தில் விலக்கிக்கொள்ளப்படலாம் என்று நியூசிலாந்து பிரதமர் ஜசின்டா ஆர்டெர்ன் அறிவித்து இருக்கிறார்.
எனவே 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நியூசிலாந்தில் நடத்தலாம். இது ஒரு யோசனை தான்’ என்று டீன் ஜோன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.