TAMIL
வரலாற்று சிறப்புமிக்க கிரிக்கெட் தொடர்! திமுத் கருணரத்னே அரைச்சதம்! நல்ல நிலையில் இலங்கை அணி

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது.
கருணாரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டி விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது.
இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி ராவல் பிண்டியில் நேற்று தொடங்கியது.
இலங்கை அணித்தலைவர் கருணரத்னே டாஸ் வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். அதன்படி அந்த அணியின் திமுத் கருணரத்னே, ஒஷாடா பெர்னாண்டோ ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
இருவரும் இணைந்து நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். பொறுப்புடன் ஆடிய திமுத் கருணரத்னே அரை சதமடித்தார்.
அணியின் எண்ணிக்கை 96 ஆக இருக்கும்போது திமுத் கருணரத்னே 59 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து, பெர்னாண்டோ 40 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 10 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 31 ரன்னிலும், தினேஷ் சண்டிமால் 2 ரன்னிலும் வெளியேறினர்.
இறுதியில், இலங்கை அணி முதல் நாள் முடிவில் 68.1 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. தனஞ்செயா டி சில்வா 38 ரன்னும், நிரோஷன் டிக்வெலா 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
10 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் போட்டி நடப்பதால் இத்தொடர் வரலாற்று சிறப்பு வாய்ந்த தொடர்பாக பார்க்கப்படுகிறது.