TAMIL
தற்கொலை செய்துகொள்ளலாம் என மூன்று முறை எண்ணினேன் – ரோகித் சர்மாவிடம் பகிர்ந்த முகமது ஷமி

கொரோனா வைரஸ் காரணமாக மே 17-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஊடரங்கால் கிரிக்கெட் வீரர்கள் வீடுகளில் தனிமையில் உள்ளனர். பொழுதுபோக்கிற்காகவும், ரசிகர்களுக்காவும் பலர் இன்ஸ்டாகிராம் லைவ் அரட்டை மூலம் சக வீரர்களுடன் உரையாடுகின்றனர்.
இந்தநிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ரோகித் சர்மாவுடன் உரையாடினார்.
கடந்த 2015 உலகக் கோப்பையில் நான் காயமடைந்தபோது, முழுமையாக குணமடைய எனக்கு 18 மாதங்கள் ஆகின. அது என் வாழ்க்கையில் மிகவும் வேதனையான மற்றும் நெருக்கடியான காலம் என்று சொல்லலாம்.
மீண்டும் விளையாடத் தொடங்கியபோது, நான் சில தனிப்பட்ட சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது தற்கொலை செய்துகொள்ளலாம் என மூன்று முறை யோசித்தேன் என ரோகித்திடம் கூறினார்.
மார்ச் 2018-ல் ஷமியின் மனைவி, அவர் மீது குடும்ப வன்முறை, பிற பெண்களுடன் தொடர்பு, மேட்ச் பிக்சிங் போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் மீது சுமத்தப்பட்டது. இதனால் அவரது வாழ்க்கை தலைகீழாக மாறியது.
மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டால், விசாரணை முடியும் வரை பிசிசிஐ, ஷமியின் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. பின்னர் அனைத்தையும் சமாளித்து மீண்டும் மைதானத்திற்கு திரும்பினார்.
அந்த சமயத்தில் 24 மணி நேரமும் என்னுடன் குடும்பத்தினர் இருந்தார்கள். அவர்கள் என்னுடன் இல்லாமல் போயிருந்தால், நான் மோசமான முடிவை எடுத்து இருப்பேன்.
இக்கட்டான சூழ்நிலையில், என்னுடன் முழுவதும் இருந்த எனது குடும்பத்திற்கு நன்றி கூறுகிறேன் என உருக்கமாக கூறினார்.