
13-வது ஐ.பி.எல். சீசனின் 20-வது ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்டீவன் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று விளையாடின.
டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி மும்பை அணியின் சார்பில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் டி காக் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.
அதிரடியாக துவங்கிய இந்த ஜோடியில் டி காக் 23(15) ரன்களும், ரோகித் சர்மா 35(23) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷன் ரன் ஏதும் எடுக்காமலும், குர்ணால் பாண்ட்யா 12(17) ரன்களும் எடுத்து வெளியேறினர்.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார்.
தொடர்ந்து அதிரடியில் கலக்கிய சூர்யகுமார் யாதவ் 79(47) ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 30(19) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
முடிவில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 79 ரன்கள் எடுத்தார்.
ராஜஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக கோபால் 2 விக்கெட்டுகளும், ஆர்ச்சர் மற்றும் தியாகி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 194 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஜெய்ஸ்வால் ரன் எதுவும் எடுக்காமல் 2 பந்துகளில் வெளியேறினார்.
அவருடன் இணைந்து விளையாடிய பட்லர் 6 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடித்து 70 ரன்கள் குவித்து அசத்தினார்.
எனினும் அவர் ஆட்டமிழந்த பின்னர் வந்த கேப்டன் சுமித் (6), சஞ்சு சாம்சன் (0), லோம்ரர் (11), கர்ரன் (15), திவாதியா (5) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஆர்ச்சர் (24) ரன்களில் பொல்லார்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன்பின் கோபால் (1), ராஜ்புத் (2) ரன்களில் ஆட்டமிழந்தனர். தியாகி ஆட்டமிழக்காமல் உள்ளார்.
18.1 ஓவர் முடிவில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்கள் எடுத்திருந்தது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.