TAMIL

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இந்தியா-வங்காளதேசம் ஆட்டம் ‘டிரா’ v

ஆசிய கண்டத்துக்கான தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் விளையாடும் 40 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்றிரவு கொல்கத்தாவில் அரங்கேறிய ஆட்டத்தில் வங்காளதேசத்தை எதிர்கொண்டது. உலக தரவரிசையில் இந்தியா 104-வது இடத்திலும், வங்காளதேசம் 187-வது இடத்திலும் உள்ளன.



உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் களம் கண்ட இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர். 25-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த ‘பிரிகிக்’ வாய்ப்பில் பந்து கம்பத்திற்கு வெளியே ஓடியது. 42-வது நிமிடத்தில் ‘பிரிகிக்’ வாய்ப்பில் தூக்கிஅடிக்கப்பட்ட பந்தை வங்காளதேசத்தின் சாட் உத்தின் தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் குழுமியிருந்த 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

இதையடுத்து முதல் பாதியில் வங்காளதேசம் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பதில் கோல் திருப்ப இந்திய வீரர்கள் தீவிர முனைப்பு காட்டினர். 72-வது நிமிடத்தில் வங்காளதேசத்தின் கோல் எண்ணிக்கை மேலும் ஒன்று உயர்ந்திருக்கும். அந்த அணியின் ஜிபான் அடித்த பந்து இந்திய கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சந்துவை தாண்டி எல்லையை நெருங்கிய சமயத்தில் இந்திய வீரர் அடில் கான் பந்தை லாவகமாக வெளியே அடித்து விட்டு காப்பாற்றினார். இதன் பின்னர் 88-வது நிமிடத்தில் ‘கார்னர்’ பகுதியில் இருந்து பிரான்டன் பெர்னாண்டஸ் உதைத்த பந்தை இந்தியாவின் அடில் கான் தலையால் முட்டி அற்புதமாக கோலாக்கினார். இந்திய கேப்டன் சுனில் சேத்ரியின் முயற்சிகள் ஏமாற்றத்திலேயே முடிந்தன. முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இந்திய அணி 3 ஆட்டங்களில் விளையாடி ஒரு தோல்வி (ஓமனுக்கு எதிராக) 2 டிரா (கத்தார் மற்றும் வங்காளதேசத்துக்கு எதிராக) என்று 2 புள்ளியுடன் 4-வது இடத்தில் உள்ளது. அடுத்த சுற்று வாய்ப்பு மங்கி போய் உள்ள நிலையில் இந்திய அணி தனது அடுத்த லீக்கில் ஆப்கானிஸ்தானை (நவ.14) சந்திக்கிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker