TAMIL

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி 2-வது வெற்றி – வங்காளதேசத்தை வீழ்த்தியது

பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.



ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பெர்த்தில் நேற்று நடந்த தனது 2-வது லீக் ஆட்டத்தில் சல்மா கதுன் தலைமையிலான வங்காளதேச அணியை சந்தித்தது.

‘டாஸ்’ ஜெயித்த வங்காளதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா ஆரம்பம் முதலே அதிரடியாக அடித்து விளையாடி நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்தார்.

தானியா பாதியா (2 ரன்) 2-வது ஓவரிலேயே நடையை கட்டினார்.

ஷபாலி வர்மா 17 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 39 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.



அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 8 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

சிறப்பாக ஆடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் (34 ரன்கள், 37 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), தீப்தி ஷர்மா (11 ரன்) ஆகியோர் ‘ரன்-அவுட்’ ஆகி நடையை கட்டினார்கள்.

20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. வேதா கிருஷ்ணமூர்த்தி 20 ரன்னுடனும், ஷிகா பாண்டே 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

பின்னர் 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன.

20 ஓவர்களில் வங்காளதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களே எடுத்தது. இதனால் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக நிகார் சுல்தானா 35 ரன்னும், முர்ஷிதா கதுன் 30 ரன்னும் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் பூனம் யாதவ் 3 விக்கெட்டும், ஷிகா பாண்டே, அருந்ததி ரெட்டி தலா 2 விக்கெட்டும், ராஜேஸ்வரி கெய்க்வாட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா ஆட்டநாயகி விருது பெற்றார்.



2-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி 2-வது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்திய அணி முதலாவது லீக் ஆட்டத்தில் 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து இருந்தது.

இன்று ஓய்வு நாளாகும். நாளை (புதன்கிழமை) கான்பெர்ராவில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து- தாய்லாந்து (காலை 9.30 மணி), பாகிஸ்தான்- வெஸ்ட்இண்டீஸ் (பகல் 1.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker