TAMIL

வெலிங்டன் டெஸ்டில் இந்தியா 165 ரன்னில் சுருண்டது: முன்னிலை பெற்றது நியூசிலாந்து அணி

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்க நாளில் 55 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 122 ரன்களுடன் தடுமாறியது.



துணை கேப்டன் அஜிங்யா ரஹானே 38 ரன்னுடனும், விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மழையால் முதல் நாளில் 35 ஓவர்கள் இழப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர்.

அஜாஸ் பட்டேல் வீசிய முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்த ரிஷாப் பண்ட், சிறிது நேரத்தில் பரிதாபமாக ரன்-அவுட் ஆகிப்போனார்.

ரஹானே பந்தை அருகில் ‘பாயிண்ட்’ திசையில் தட்டிவிட்டு ஒரு ரன்னுக்காக ஓடினார்.

வேண்டாம் என்று எதிர்முனையில் நின்ற பண்ட் சைகை காட்டியும் அவர் திரும்பவில்லை.

இதனால் அவருக்காக தனது விக்கெட் ரிஷாப் பண்ட் (19 ரன்) தியாகம் செய்தார்.

பண்ட் பேட்டிங் முனையை நெருங்குவதற்குள் அஜாஸ் பட்டேல் பந்தை சரியாக ஸ்டம்பு மீது வீசி ரன்-அவுட் செய்தார்.

அடுத்து வந்த அஸ்வின் (0) சந்தித்த முதல் பந்திலேயே கிளன் போல்டு ஆனார்.



ரஹானேவும் (46 ரன், 138 பந்து, 5 பவுண்டரி) நிலைக்கவில்லை.

டிம் சவுதி அவுட் ஸ்விங்காக வீசிய பந்தை தொடவா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் ரஹானே பேட்டை சற்று மேலாக நகர்த்தினார்.

அதற்குள் பந்து பேட்டின் கீழ்பகுதியில் உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் வாட்லிங்கிடம் கேட்ச்சாக சிக்கியது.

கடைசி கட்டத்தில் முகமது ஷமி 3 பவுண்டரியுடன் 21 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை 150 ரன்களை கடக்க வைத்து ஆறுதல் அளித்தார்.

முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 68.1 ஓவர்களில் 165 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

முதல் இன்னிங்சில் விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி பெற்ற 3-வது மோசமான ஸ்கோர் இதுவாகும்.

நியூசிலாந்து தரப்பில் புதுமுக வீரர் கைல் ஜாமிசன், டிம் சவுதி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் டாம் லாதம் (11 ரன்), டாம் பிளன்டெல் (30 ரன்) இருவரையும் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா வெளியேற்றினார்.

இதைத் தொடர்ந்து கேப்டன் கேன் வில்லியம்சனும், தனது 100-வது டெஸ்டில் ஆடும் ராஸ் டெய்லரும் கைகோர்த்து அணிக்கு வலு சேர்த்தனர்.



வில்லியம்சன், ஷாட்பிட்ச் பந்துகளை நேர்த்தியாக விளையாடி ரன்களாக மாற்றினார்.

இந்திய பிரதான வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சு இந்த முறையும் எடுபடவில்லை.

அவரது பந்துவீச்சை திறம்பட சமாளித்தனர்.

முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி முன்னிலையை எட்டியதும் இந்த ஜோடி பிரிந்தது.

ராஸ் டெய்லர் 44 ரன்களில் (71 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), இஷாந்த் ஷர்மாவின் பந்தில் வீழ்ந்தார்.

இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தது.

சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வில்லியம்சன் 89 ரன்களில் (153 பந்து, 11 பவுண்டரி) முகமது ஷமி வீசிய பந்தை அடித்த போது, ‘கவர்’ திசையில் நின்ற மாற்று பீல்டர் ஜடேஜா பாய்ந்து விழுந்து பிரமாதமாக கேட்ச் செய்தார்.

அடுத்து வந்த ஹென்றி நிகோல்ஸ் (17 ரன்) அஸ்வினின் சுழற்பந்து வீச்சில் பக்கத்தில் நின்ற கோலியிடம் பிடிபட்டார்.

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 71.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்த நிலையில், போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது.



விக்கெட் கீப்பர் வாட்லிங் 14 ரன்னுடனும், கிரான்ட்ஹோம் 4 ரன்னுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர்.

இந்திய தரப்பில் தனது 97-வது டெஸ்டில் விளையாடும் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நியூசிலாந்து அணி இதுவரை 51 ரன்கள் முன்னிலை பெற்றிருப்பதால் அவர்களின் கையே இப்போதைக்கு ஓங்கி நிற்கிறது.

இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker